அஞ்சுவண்ணப் பூவே 1

நிசப்தமான அறையில் அந்த குரல் திடீரென ஒலித்ததில் ஏதோ சிந்தனை வலையினில் சிக்கிக் கொண்டிருந்த அபிதா நிமிர்ந்து குரல் வந்த திசையில் நோக்கினாள்.

“என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க அபி நீ? மாப்பிள்ளை நாலு தடவை போன் பண்ணிட்டார். ஏன் உன் போனை ஆஃப் பண்ணி வச்சிருக்க?”

தாயின் பேச்சை கேட்டதும் சூன்யமாக இருந்த அவளது முகம் மெல்ல ஒளிர்ந்து பின் வருத்தத்தை பூசிக் கொண்டது.

“ம்ச்” என்று உதட்டை சுழித்து விட்டு தன் அருகில் கவிழ்ந்து கிடந்த அவளது கைபேசியை திருப்பிப் பார்த்தாள்.

அது தன் உயிரை விட்டுவிட்டதன் விளைவாக இருண்டு கிடந்தது.

அதைக் கண்ட அபிதாவின் தாய் சாந்தா, “பாரு போன் சார்ஜ் இல்லாம கிடக்குது. அதைக் கூட பார்க்காம என்னத்த வெறிச்சுகிட்டு இருக்க?” என்றவர் அவள் கையில் பழச்சாறு ஒன்றை திணித்து விட்டு  சமையலறை நோக்கி நடந்தார்.

கையிலிருந்த கேரட் ஜூஸை வெறித்துப் பார்த்த அபிதா அதைக் குடிக்க மனமில்லாமல் அருகில் இருந்த டீபாயில் வைத்தாள்.

கணவன் தன்னை ஏன் அழைத்தான் என்று நன்கு அறிந்ததால் அவனை மீண்டும் அழைக்கும் முயற்சியில் இறங்காமல் தன் படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

அதனுள் தெரிந்த அவளின் கணவன் முகம் அவள் இதழ்களில் மெல்லிய புன்னகையை கொண்டு வந்தாலும் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிவதை தடுக்க முடியாமல் அப்படியே கிடந்தாள்.

அவனைக் கண்டு முழுமையாக ஒரு வாரம் கடந்துவிட்டது என்பதை நம்ப இயலவில்லை அவளால்.

அவன் கையணைப்பிலும் அவன் மடியிலும் கிடந்து பஞ்சணை என்பதையே மறந்திருந்த அவளுக்கு இப்போது கிடக்கும் அந்த ஃபோம் மெத்தை கூட முள்ளாகக் குத்தியது.

ஆனால் அவளால் கணவனை அழைத்து பேச முடியாது. ஆம். முடியாது. பேசினால் அவன் பின்னால் அவள் சென்று விடுவாள். அது அவளுக்கு நல்லதல்ல.

அவளுக்கு என்று சொல்வதை விட அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லதல்ல.

அப்படித்தான் அவள் எண்ணிக்கொண்டு விரதம் போல கணவனை தொடர்பு கொள்ளாமல் இருக்கிறாள்.

இதனை தொடர முடியுமா? என்ற கேள்விக்குத்தான் பதில் தெரியாமல் கண்ணீர் வடிக்கிறாள்.

வேலையை முடித்துவிட்டு மகளைக் காண வந்த சாந்தா மகள் பழச்சாறை குடிக்காமல் கண்ணீருடன் படுத்திருப்பது கண்டு மனம் வருந்தினார்.

சிஎத்தனை தடவை இந்த கல்யாணம் வேணுமான்னு யோசி அபின்னு சொன்னேன். கேட்டாளா? இப்ப இப்படி மாலை மாலையா கண்ணீர் விட்டா நான் என்ன செய்வேன்?’ என்று பெற்றெடுத்த வயிற்றை அழுத்திக் கொண்டு எண்ணினார்.

எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? தாய்க்கு பிள்ளையல்லவா!

அறையை விட்டு வெளியே வந்தவர் மனம் கேளாமல் தன் மருமகனுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தார். அவன் எடுத்ததும்,

“தம்பி பாப்பா எழுந்துட்டா. போன் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகி கிடக்கு.” என்றவர் அடுத்து என்ன சொல்வதென்று தயங்க,

“அப்ப போனை அவ கிட்ட கொடுங்க. நான் பேசணும்.” என்று இரும்பு போல ஒலித்த குரலில் அவருக்கு மெல்லிய பயம் வந்தாலும் மகளின் வாழ்வை எண்ணி,

“தம்பி கொஞ்சம் சிரமம் பார்க்காம நேர்ல வாங்களேன். அவ ஆளும் சரியில்ல, பார்வையும் சரியில்ல. அவ உங்களை தேடுறது எனக்கு நல்லாவே புரியுது. ஆனா உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியல. தெரியவும் வேண்டாம். நீங்களே வந்து நேர்ல பேசி அவளை கூட்டிக்கிட்டு போங்க.” என்று வேக வேகமாக மனதில் இருந்ததை வெளிப்படுத்தினார்.

“என்னால இப்ப வர முடியாது. அவளும் இப்ப வீட்டுக்கு வரவேண்டாம். போன்ல மட்டும் பேச சொல்லுங்க.” என்று அழுத்தமாக வந்த பதிலில் குழம்பியவர்,

“தம்பி என்னை உங்களுக்கு தூது ஆளா மாத்தாதிங்க பா. என்னால முடியாது. ஏற்கனவே நான் நெஞ்சுவலிக்காரி. என் பிள்ளை இப்படி இருக்கிறத என்னால கண் கொண்டு பார்க்க முடியலப்பா. உன்னை கெஞ்சி கேட்கறேன். நேர்ல வாப்பா.” என்று அழுதுவிடும் குரலில் பேசினார் சாந்தா.

“நான்…  நான் இப்ப இந்தியால இல்ல. பிரான்ஸ்ல இருக்கேன். இந்தியா வர இன்னொரு வாரம் ஆகும். அதுக்கு தான் வர முடியாதுன்னு சொல்றேன். எனக்கு அபி மேல எந்த கோபமும் இல்ல.” என்று வேகமாகக் கூறினான் அவன். 

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல தம்பி. அவளை அப்படியே விட்டுட மாட்டிங்க தானே?” அவர் கேள்வியில் ஒளிந்திருந்த பயத்தைக் கண்டு,

“நான் நேர்ல வர்றேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வர்றேன்.” கூறியவன் அழைப்பை துண்டித்திருந்தான்.

கைபேசியை கையில் வைத்துக் கொண்டு மகளை எண்ணி வருந்தினார் சாந்தா.

தன் மாமியாரிடமிருந்து வந்த அழைப்பை பேசி முடித்து விட்டு எதிரில் நின்ற  உயரமான கட்டிடத்தை கண்ணாடி கதவின் வழியே நோக்கினான்.

அவன் வந்த வேலை நேற்றே முடிந்திருக்க வேண்டியது. ஆனால் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக மறுவாரம் வரை அது நீண்டுவிட்டது.

அபியை எண்ணியவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. பத்து நாட்களாக அவன் மனதில் நிகழும் போராட்டத்தை மறைத்துக் கொண்டு அமைதியாக அவனது வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறான்.

மனம் மட்டும் எப்பொழுதும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.  தன் மனைவி தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று தான் இத்தனை நாளும் எண்ணி இருந்தான். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை அறிந்ததும் செய்வதறியாது திகைத்தான்.

முடியவில்லை என்பதை விட அவள் விரும்பவில்லை என்று சொல்ல வேண்டுமோ? 

அவளுக்கு அதில் மட்டும் விருப்பமில்லையா? அல்லது அவன் மேல் இருந்த விருப்பமே இப்போது இல்லையா? என்று அவன் மனதிடம் அவனே கேட்க பயந்து ஒளித்து வைத்திருக்கும் கேள்வி.

விடை தெரிந்தால் அவனால் தாங்க முடியுமா என்று தெரியாததால் விடையறிய விரும்பாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

சிந்தனை சிறையில் சிக்கிக் கொண்டிருந்தவனை, “அண்ணா” என்ற ரஞ்சித்தின் குரல் நடப்புக்கு இழுத்து வந்தது.

“என்ன தான் சொல்றான் அந்த கார்ல்சன்? நேத்தே முடிய வேண்டிய டீல். அவனை என்ன பண்றேன் பாரு…” என்று எரிச்சலுடன் இடுப்பில் கையூன்றியபடி திரும்பிய அஜய் கிருஷ்ணாவின் முகம் கோபத்தில் ரத்தமென சிவந்திருந்தது.

அகண்ட அவன் தோள்களையும் திரண்டிருந்த அவன் புஜங்களையும் பார்த்து ரஞ்சித்தே ஒரு விநாடி பயந்து தான் போனான்.

“அண்ணா கோவப்படாதீங்க. இந்த டீல் நமக்கு ரொம்ப முக்கியம். இல்லன்னா அந்த வெள்ளை பன்னியை அன்னைக்கே வெட்டிப் போட்டிருக்க மாட்டோமா?” என்று சமாதானமாக கூறினான்.

“அவன் கிட்ட தெளிவா சொல்லிடு. நாளைக்கு சாயங்காலம் டீல் முடிஞ்சு பேப்பர் எல்லாம் என் கைக்கு வந்திருக்கணும். இல்லன்னா ஹைதராபாத் யுனிவர்சிட்டில ஏதோ ஒரு பிரச்சனைக்கு சின்னதா மாணவர் போராட்டம் நடக்கும். அதுல வர்ற கலவரத்தில் அவன் பையன் பரலோகம் போயிடுவான்னு கறாரா சொல்லிடு.” என்று அழுத்தமாக கூறிவிட்டு அந்த ஹோட்டல் அறையை விட்டுப் புறப்பட்டான்.

போகும் அவன் முன் மரியாதையோடு தலை குனிந்து நின்ற ரஞ்சித், வெளியே நின்ற ஆட்களை உள்ளே அழைத்தான்.

“அந்த கார்ல்சன் கிட்ட அண்ணன் சொன்னதை தகவலா சொல்லி அனுப்புங்க டா. அண்ணன் கோபமா போறாரு. கீழ பார்ல தான் இருப்பாரு. ஒருத்தன் எப்பவும் அவர் பக்கத்துல இருங்க.” என்று கட்டளை பிறப்பித்துவிட்டு, கைபேசியை எடுத்தான்.

“டேய் நேத்து போக வேண்டிய சரகெல்லாம் சரியா டெலிவரி ஆச்சா? நாளை மறுநாள் நாங்க வந்துடுவோம். எந்த குளறுபடியும் இருக்கக் கூடாது. வீட்டை சுத்தம் பண்ணி வைக்க சொல்லி பர்வதம் அம்மா கிட்ட சொல்லு.” என்று ஊரில் உள்ள தொழில், வீடு என்று அஜய் கிருஷ்ணாவின் அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டான் ரஞ்சித்.

கீழே ஹோட்டல் பாரில் அமர்ந்து பார் டெண்டர் டிஷ்யூ பேப்பருக்கு மேல் வைத்த அந்த தங்க நிற திரவத்தை வெறித்தான் அஜய் கிருஷ்ணா.

மதுபானம்… இதனை அவன் வெறுத்த நாட்களும் அவன் வாழ்வில் உண்டு. ஆனால் இன்று…

நொடியில் அதனை தன் தொண்டையில் செய்துவிட்டு பட்டென்று பாரில் வைத்ததும், ஒன் மோர் சார் என்ற பார் டெண்டர் கேள்விக்கு நோ என்று மறுத்துவிட்டு  எழுந்த நேரம் அவன் கைபேசி சிணுங்கியது.

இந்திய எண்ணைக் கண்டு நெற்றி சுருக்கி அதனை ஏற்று காதில் பொருத்தியதும்,

“என்ன டா ஊர் பக்கம் வந்தா நான் ஏதாவது செய்திடுவேன்னு பயந்து வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டியா என்ன?” நக்கலாக வந்த கேள்விக்கு சொந்தக்காரன் அஜய் கிருஷ்ணாவின் பரம எதிரியான வைபவ் வஜ்ரவேல்.

“உனக்கு பயந்து… நல்ல காமெடி தான். உன்னை போல அப்பன் காசுல வாழ்ற சொம்பையா டா நான்? எனக்குன்னு என் பிசினஸ் இருக்கு. அதை வளர்க்க நான் நாலு இடம் போக வர இருப்பேன். உன்னைப் போல தின்னுட்டு தோணும்போது யாரையும் திட்டிக்கிட்டு சவடால் பேசிட்டு திரிஞ்சா என்னை நம்பி இருப்பவர்களை நான் காப்பாத்த முடியுமா?” என்று பதிலுக்கு நக்கல் செய்தான் அஜய் கிருஷ்ணா.

“அதுக்கு நீ உழைக்கணும் டா. உண்மையா உழைக்கணும். அடுத்தவன் காசை அடிச்சு பிடுங்க கூடாது.” என்று உச்ச பட்ச குரலில் கூறினான் வைபவ்.

“எது டா அடுத்தவன் காசு? அது எங்க நிலம். எங்க விளைச்சல். எங்க சொத்து. எங்க உரிமை. உங்கப்பன் ஏமாத்தி எழுதி வாங்கிட்டா அது உங்க காசா, சொத்தா மாறிடுமா டா?”  என்று அஜயும் கோபம் கொள்ள,

“டேய் வேண்டாம் என்கிட்ட வச்சுக்காத.”

“எங்க கிட்ட பிடுங்கின நிலம் மட்டுமில்ல டா, உன் அப்பன் பேர்ல, உன் குடும்பத்து பேர்ல உள்ள எல்லாத்தையும் பிடுங்கி உன்னை நடு ரோட்ல நிறுத்துறேனா இல்லையான்னு பாரு டா. இல்லன்னா என் பேர் அஜய் கிருஷ்ணா இல்ல டா” என்று கைபேசியை படாரென தரையில் எறிய, அது உடைந்து திசைக்கு ஒரு பகுதியாக பறந்தது.

அவனது செயலைக் கண்டதும் ரஞ்சித்தால் அவனுடன் அனுப்பப்பட்டவன் தகவல் கொடுக்க அடுத்த பத்து நிமிடத்தில் ஒருவன் புதிய செல்போனைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினான்.

ஏற்கனவே உடைந்த செல்போனையும் சிம்மையும் எடுத்து வைத்திருந்தவன் சிம்மை புது போனில் போட்டு தயாரானதும் அஜய் கிருஷ்ணாவின் முன்னே கொண்டு வைத்தான்.

சட்டென திரும்பிய அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“ஏன் டா?” என்று சிரிக்க, பவ்யமாக “இருக்கட்டும் அண்ணா” என்று மரியாதையாக பதில் தந்து பத்தடி தள்ளி காவலாய் நின்றவனைக் கண்டு மனம் குளிர்ந்தான் அஜய் கிருஷ்ணா.

இந்த அன்பும் மரியாதையும் தான் அவனை இந்த இடத்தில் கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது. என்றோ மனமுடைந்து மறைந்து போயிருக்க வேண்டியவனை இன்று இந்த உயரத்திற்கு வர வைத்து அவர்களை உயர்த்த அவன் ஓடவும் தூண்டுகோலாக அமைந்தது.

ஆனால் அதற்கு அவன் கொடுக்கும் விலை தான் சற்று அதிகமோ? 

அபிதா… அவளில்லாமல் அவனால் இருக்க முடியவில்லையே! அவளை விடுத்து இந்த வாழ்வு தனக்கு தேவையா? என்று மெல்லிய சலனத்துடன் இருந்தவன் மனதில் வைபவ்வின் பேச்சு தெளிவைக் கொடுத்தது.

அபிதா புரிந்து கொள்வாள் என்று நம்பினான். அவனது நம்பிக்கை உண்மையாகுமா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *